தினசரி நாட்காட்டியில் ஒவ்வொரு நாளும்,கிழிந்து போகும் ஒவ்வொரு தாளும் நம் வாழ்நாளில் ஒருநாள் கழிந்து போனதை நமக்கு நினைவூட்டுகிறது. வயது ஆக ஆக நம் உடலில் தான் எத்தனை எத்தனை மாற்றங்கள். இயற்கையாய் நிகழும் சில தேய்மானங்கள். அதன் விளைவாய் நிகழும் சில ‘நோய்’மானங்கள். எலும்புகளின் ஆரோக்கியத்துக்கும், வளர்சிதை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ளவும் வாழ்க்கைமுறை, உணவு, உடற்பயிற்சி ஆகியன சரியான முறையில் அமைவது இன்றியமையாததாகிறது.
உடல் பருமனை கட்டுக்குள் வைத்துக் கொள்ள எவ்வளவு மெனக்கெட வேண்டியுள்ளது. நடைபயிற்சி, ஓட்டம், உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடுகள் என்று நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் கொஞ்ச நஞ்சமா? ஆயினும் உடல் பருமன் மட்டும் குறைந்த பாடில்லை.
உடல் பருமன் அதிகரிப்பால் எலும்பு மூட்டுகளில் தரப்படும் அதிக அழுத்தத்தால், வலி ஏற்படுகிறது. மூட்டுவலி,தேய்மான பாதிப்புகளில் இருந்து ஒல்லிப்பிச்சான்கள் கூட தப்ப முடிவதில்லை. 30 வயதுக்கும் அதிகமானோர், குறிப்பாக, பெண்களுக்கு இது ஒரு பொதுவான பிரச்சனை ஆகும். இவர்களுக்கு உடற்பயிற்சி சவால் ஆகிறது. உடல் ஆரோக்கியம் குறைகிறது.
இதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்று வளர்சிதை மாற்றம். நாம் உண்ணும் உணவை செரிமானம் செய்து, அதிலிருந்து எலும்புகளின் ஆரோக்கியத்துக்குத் தேவையான ஊட்டச் சத்துக்களை கிரகிக்கும் தன்மை வயது ஆக ஆக நம் உடம்பில் குறைகிறது.